மதுக் கடத்தலை தடுக்க முயன்ற காவலரை கார் ஏற்றிக் கொல்ல முயன்றதாக 7 பேர் மீது பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பண்ருட்டி காவல் நிலையத்தில் 2-ஆம் நிலைக் காவலராகப் பணியாற்றி வருபவர் ஆனந்த் (30). புதுச்சேரியிலிருந்து காரில் மதுப் புட்டிகள் கடத்தப்படுவதாக இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை
தகவல் கிடைத்ததாம். பின்னர், காவலர்கள் ஆனந்த், ராஜேந்திரன், பிரசாத் ஆகியோர் தனித் தனி பைக்குகளில் அந்தக் காரை பின்தொடர்ந்தனராம். பாபுகுளம் அருகே வேகத்தடை இருந்ததால் அந்தப் பகுதியில் கார் மெதுவாகச் சென்றபோது, பின்னால் வந்த காவலர் ஆனந்தின் பைக் மோதியதில் காரின் கண்ணாடி உடைந்ததாம்.
அப்போது, காருக்குள் புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்ததைப் காவலர் ஆனந்த் பார்த்து காரை நிறுத்துமாறு கூறினாராம்.
இதனால், ஆத்திரமடைந்த காரிலிருந்த கீழ்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த சுபாஷ், சுதாகர், வசந்த், மஹாராஜன், கொளஞ்சி, அழகிரி, பண்ருட்டி நந்தனார் காலனியைச் சேர்ந்த துரைராஜ் ஆகியோர் காவலர் ஆனந்த் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றனராம். இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து சுபாஷ் உள்ளிட்ட 7 பேரையும் தேடி வருகின்றனர்.