கடலூர் முதுநகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி தராசு மக்கள் மன்றத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கடலூர் துறைமுகம் பகுதியில் இயங்கி வரும் தராசு மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலர் து.துரைவேலு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் அளித்த மனு: கடலூர் முதுநகர் கிளைவ் வீதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இந்த சுகாதார நிலையத்தை நகரப் பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மீனவ கிராமத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், போதுமான படுக்கை வசதி, மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை முழுநேர அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மன்றம் சார்பில், கடலூர் பொதுநல இயங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து சுமார் 2 ஆயிரம் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இதன் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக துரைவேலு கூறினார். பொதுநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார், மாற்றுத் திறனாளி நலச் சங்கத் தலைவர் சையது முஸ்தபா, பேருந்து நிலைய சிறு பழ வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமாறன், தராசு மக்கள் மன்ற நிர்வாகிகள் முத்து, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.