விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில், தேர்வு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னோடி வங்கி மாவட்ட முன்னாள் மேலாளர் ம.மனோகரன், பயிற்சியின் நோக்கம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது: மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதற்கு சுயதொழில் நல்ல உந்துசக்தியாக இருக்கும். மத்திய அரசின் முத்ரா திட்டத்தின்கீழ் எவ்வித பிணையும் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி சுயதொழில், பண்ணை சார்ந்த தொழில்கள், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு மற்றும் பல்வேறு சிறு தொழில்களை செய்து தங்களது வாழ்க்கையை மேம்படுத்தலாம் என்றார்.
சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அ.சிவனேசன் பேசுகையில், வேளாண் சார்ந்த துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துக்கூறினார். தொழில் மைய மாவட்ட மேலாளர் அ.மாயத்தேவர், சென்னை தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் கணேசன், கல்லூரி முதல்வர் வேலு, துணை முதல்வர் மதிவாணன், பேராசிரியை முத்தழகி, துறைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.