கடலூர் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள பாடல்பெற்ற தலமான வரதராஜப் பெருமாள் கோயிலில் மாசி மகம் தீர்த்தவாரி திருவிழா திங்கள்கிழமை தொடங்குகிறது.
இந்த விழாவில் மாசிமகம் தீர்த்தவாரிக்காக திருக்கோவிலூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஉலகளந்தப் பெருமாள் என்ற தேகளீசப் பெருமாள் கடந்த 14-ஆம் தேதி புறப்பட்டார். அவர், குன்னத்தூர், பெண்ணைவலம், பெரியசெவலை, ஆனைவாரி, வீரப்பார், சேமக்கோட்டை, அங்குசெட்டிபாளையம், திருவதிகை, மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், நெல்லிக்குப்பம், பில்லாலி வழியாக வருகை தந்து திங்கள்கிழமை மாலை திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் எழுந்தருளுகிறார். அப்போது, பூர்ண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு உலகளந்தப் பெருமாளை, வரதராஜப் பெருமாள் தனது சந்நிதிக்கு அழைத்து வருகிறார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு இருவரும் மணவாள மாமுனிகளுடன் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குச் சென்று 8 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து, விசேஷ திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் திருக்கோவிலூர் உலகளந்தப் பெருமாள் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்கிறார்.
புதன்கிழமை (பிப்.20) காலை 7 மணிக்கு உலகளந்தப் பெருமாள் தங்க கருட வாகனத்திலும், வரதராஜப் பெருமாள் சேஷ வாகனத்திலும் திருப்பாதிரிபுலியூர், திருவந்திபுரத்தில் ராஜ வீதியுலா நடைபெறும். 21-ஆம் தேதி காலை 6 மணிக்கு உலகளந்தப் பெருமாள் திருக்கோவிலூர் புறப்பட்டுச் செல்கிறார். எனவே, இந்த நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க வேண்டுமென செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.