வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவல் துறை, வருவாய்த் துறையினரை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக வாக்குச் சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளித்தல், மாதிரி வாக்குப் பதிவு ஆகிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்ற இலக்கை நோக்கி தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. எனவே, அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையம், சென்னை முதன்மை தேர்தல் அலுவலர்களின் அறிவுரைப்படி எதிர்வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காமல் உள்ளவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை வாக்காளர்கள் முழுமையாக பயன்படுத்தி, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள வேண்டும். எந்த ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்ற இலக்கை கடலூர் மாவட்டத்தில் எய்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அதில் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.