விவசாயிகள் ஊக்க நிதியான ரூ.6 ஆயிரம் பெற தகுதியான விவசாயிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் கிஸான் நிதித் திட்டத்தின் கீழ், 5 ஏக்கர் வரை விவசாய நிலமுள்ள சிறு, குறு விவசாய குடும்பங்களின் வருமானம், வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக இந்த நிதி பிரித்து வழங்கப்படும்.
இதில், 2018-19-ஆம் ஆண்டுக்கான முதல் தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் டிசம்பர்-மார்ச் வரையிலான காலத்துக்கு வழங்கப்படும்.
இதற்காக, விவசாய நிலமுள்ள தகுதியான சிறு, குறு விவசாய குடும்ப பயனாளிகளை கணக்கெடுக்கும் பணிநடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தில் இதுவரை கணக்கெடுக்கப்பட்ட பயனாளிகளில் தகுதியான பயனாளிகளின் பெயர் பட்டியல் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களிலும், கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதில் பெயர் விடுபட்டிருக்கும் தகுதியான பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சுய உறுதிமொழி படிவத்துடன் தொடர்புடைய ஆவணங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.