தியாகிகள் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூரில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பாதிரிபுலியூர் தேரடி தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் பி.சண்முகம் , சிஐடியூ மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின்படி உரிய விலையை தீர்மானிக்க வேண்டும். ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் என தீர்மானிக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தினர் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்டச் செயலர் ஜி.மாதவன், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் டி.பழனிவேல், பொருளாளர் ஜி. குப்புசாமி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் பிரகாஷ், பொருளாளர் வி.செல்லையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.