தைப்பூசத்தை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்களின் தவத்தை ஏற்று தைப்பூச நாளில் சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் புரிந்ததாக நம்பப்படுகிறது. இதனை முன்னிட்டு நடராஜர் கோயிலில் திங்கள்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் ஸ்ரீநடராஜப் பெருமாளை பார்த்துக் கொண்டு செல்ல, பின்னே பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நடராஜர் கோயிலில் ஆதிமூலநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் பஞ்ச மூர்த்திகள், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோர் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான அஸ்திரராஜர் நீரில் மூழ்கி எழுந்து தீர்த்தவாரி காட்சியளித்தார்.
திரளான பக்தர்கள் பங்கேற்று தீர்த்தவாரியை தரிசித்தனர். பின்னர் சித் சபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. நடராஜப் பெருமானுக்கு ரவா கேசரி படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.