பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவன் மீட்பு
திட்டக்குடி பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை அரசுப் பேருந்து நடத்துநர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், முள்ளுகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மனைவி இளையராணி (32). இவர் திங்கள்கிழமை தனது 4 வயது மகன் ஸ்ரீவீரா மற்றும் மகள், தந்தையுடன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வந்தார். பேருந்து நிலையத்தில் இறங்கிய பின்னர் மகனையும், தனது தந்தையையும் நிறுத்தி வைத்துவிட்டு மகளுடன் கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது ஸ்ரீவீராவின் தாத்தா இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுவனை தனியே விட்டு சென்று விட்டார். இருவரும் திரும்பிவந்து பார்த்தபோது சிறுவனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் குழந்தையை காணாததால் இதுகுறித்து அருகிலுள்ள திட்டக்குடி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
இந்த நிலையில், திட்டக்குடியிலிருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் சிறுவன் ஒருவன் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அதன் நடத்துநர் அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, தனது தாய், தாத்தா இருவரும் பேருந்தில் ஏறி விட்டதாக நினைத்து ஏறியதாக சிறுவன் தெரிவித்தாராம். இதனையடுத்து, சிறுவனை திட்டக்குடி காவல் நிலையத்தில் நடத்துநர் ஒப்படைத்தார்.
இதனையடுத்து, உதவி ஆய்வாளர் சீனிவாசன் அந்தச் சிறுவனை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார்.