காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராகவன் தலைமை வகித்தார். சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதிக்குள்பட்ட காட்டுமன்னார்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் 144 இடங்களில் 250 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பகுதிக்கு நியமிக்கப்பட்ட 25 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் குறித்த பல்வேறு பயிற்சிகள் முகாமில் அளிக்கப்பட்டன. மேலும் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும், தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தும், தேர்தல் அலுவலக பணிகள் குறித்தும் விரிவான பயிற்சிகள், அறிவுரைகள் வழங்கப்பட்டன. காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், துணை வட்டாட்சியர் பிரகாஷ், ரோகினிராஜ் மற்றும் மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர்.