பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தியதாக 15 மாட்டு வண்டிகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி பகுதியில் செல்லும் கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் இருந்து மாட்டு மண்டிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பண்ருட்டி உதவி ஆய்வாளர் பாக்கியலட்சுமி மற்றும் போலீஸார் மேல்குமாரமங்கலம், மாரியம்மன் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அதன் உரிமையாளர்கள் மேல்குமாரமங்கலம் அழகுராஜன் (45), எஸ்.கே.பாளையம் ராமமூர்த்தி (40), கிருஷ்ணமூர்த்தி (53), தட்டாம்பாளையம் லட்சுமணன் (48) ஆகியோரை கைது செய்தார். புலவனூர் தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக தட்டாம்பாளையம் சிவராமன் (35), தட்சிணாமூர்த்தி (52), ஏரிப்பாளையம் சந்திரவேல் (39) ஆகியோரை பண்ருட்டி உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்து 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார். இதேபோல, மேல்குமாரமங்கலம் போர்மன்னன் (40), அம்பிகாபதி (27), கண்டரக்கோட்டை லோகநாதன் (27), காசிநாதன் (37) ஆகிய 4 பேரை உதவி ஆய்வாளர் சந்திரன் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.
நடுவீரப்பட்டு காவல் சரகம் பட்டீஸ்வரம் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகளை உதவி ஆய்வாளர் ராஜாராமன் பறிமுதல் செய்தார். மேலும், தப்பியோடிய மாட்டு வண்டி உரிமையாளர்கள் வெங்கடாம்பேட்டை சக்தி, குறிஞ்சிப்பாடி சின்னதுரை, ஆதிமூலம், ஆயிப்பேட்டை கதிர்வேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.