குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆந்திர இளைஞர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் கோ.கார்த்திகேயன் (37). இவர் கடந்த பிப்.5-ஆம் தேதி அந்தப் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.50 ஆயிரம் பணம் எடுத்தார். அந்தப் பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துவிட்டு, அருகே உள்ள கடைக்குச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் பிடிபட்ட ஆந்திரம் மாநிலம், சித்தூர் மாவட்டம், ஒஜிகுப்பத்தைச் சேர்ந்த குஞ்ஜாலா என்ற விஜயசந்தரா (40) (படம்) என்பவருக்கு பணம் திருட்டில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் இவர் ஏற்கெனவே 2 முறை இதேபோன்ற செயலில் ஈடுபட்டதும், மேலும் இவர் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் 4 குற்ற வழக்குகள், சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் 2 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
எனவே, இவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்புக் காவலில் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டதைத் தொடர்ந்து குஞ்ஜாலா குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.