குறிஞ்சிப்பாடியில் கடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 250 கிலோ நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களை பேரூராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறிஞ்சிப்பாடி கடை வீதி பகுதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், புதன்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் த.சக்கரவர்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர் பி.கணேசன் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் கடை வீதியில் சோதனை நடத்தினர். அப்போது, நெய்வேலியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறிய சரக்கு வாகனத்தில் நெகிழிப் பை, நெகிழிப் பொருள்களை கொண்டு வந்து குறிஞ்சிப்பாடி கடை வீதியில் உள்ள கடைகளில் விநியோகம் செய்தது தெரிய வந்தது.
பேரூராட்சி அதிகாரிகள் அந்த வாகனத்திலிருந்த 50 கிலோ சில்வர் கோட்டிங் நெகிழிப் பேப்பரை பறிமுதல் செய்து ரூ.1,000 அபராதம் விதித்தனர். மேலும், கடைகளில் விநியோகம் செய்யப்பட்ட 200 கிலோ நெகிழிப் பொருள்களையும் பறிமுதல் செய்து ரூ.2,000 அபராதம் விதித்தனர்.