வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 96-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் நா.மகாலிங்கத்தின் உருவப் படத்தை, சுத்த சன்மார்க்க நிலைய துணைத் தலைவர் தவத்திரு ஊரன் அடிகளார் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தி வாழ்த்துரை ஆற்றினார். கோவை சிவப்பிரகாச சுவாமிகள் சிறப்புரையாற்றினார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற பா-பாபு 150-ஆவது பிறந்த நாள் விழாவில், வடலூர் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனத்தின் சார்பில் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவிகள், ஆசிரியர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கு ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் வழங்கப்பட்ட பெண் கல்விக்கான ஊக்கத்தொகை ரூ.61,000-க்கான காசோலையை தாளாளர் ரா.செல்வராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியை நிர்வாக அலுவலர் லதாராஜா வெங்கடேசன் தொகுத்து வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெ.ராமானுஜம், தலைமையாசிரியர்(ஓய்வு) ஜெயபால், எஸ்.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.