இலவச அரிசி, மண்ணெண்ணெய் கோரி, ஆளுநர் கிரண் பேடியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
புதுவை மாநிலம், வில்லியனூர் அருகேயுள்ள மண்ணாடிப்பட்டு கிராமத்தில் அரசுப் பள்ளிக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கணினி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பேசினார்.
அவர் பேசும்போது, ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான உதவிகளை செய்யவேண்டும். பெற்றோர்கள் மது குடிப்பதை தவிர்த்து அதற்கான பணத்தை பிள்ளைகளின் கல்விக்குச் செலவிட வேண்டும். பெற்றோர்கள் மது குடிப்பதை பிள்ளைகள் தடுக்கவேண்டும்.
மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார். விழாவில் மண்ணாடிப்பட்டு தொகுதி எம்எல்ஏ டி.பி.ஆர்.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழா முடிந்து வெளியில் வந்த ஆளுநரை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு, நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி, மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என்றும் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும், மேலும், கிராமப் பகுதிகளில் உயர்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் கல்வியைத் தொடர மேல்நிலைப் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பொதுமக்களை சமாதானம் செய்து ஆளுநர் கிரண் பேடியை போலீஸார் அனுப்பிவைத்தனர்.