காரைக்கால் ரயில் நிலையம் செயல்படத் தொடங்கி 8 -ஆம் ஆண்டையொட்டி, நிலையத்தில் இனிப்பு வழங்கி ரயில் பயன்படுத்துவோர் நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை கொண்டாடினர்.
நாகூரிலிருந்து 10.5 கி.மீ. தொலைவு காரைக்கால் வரை புதிதாக அகல ரயில் பாதை அமைத்து, கடந்த 17.12.2011 -ஆம் ஆண்டு சேவை தொடங்கப்பட்டது. மும்பை, சென்னை, எர்ணாகுளம், பெங்களூரு மற்றும் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நிலையம் செயல்படத் தொடங்கி 7 ஆண்டுகள் நிறைவடைந்து
8 -ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட ரயில் பயன்படுத்துவோர் நலச் சங்கம் சார்பில், ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிலைய அதிகாரிகள் முத்துக்குமார், சசிராஜ் மற்றும் முதுநிலை பகுதி பொறியாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, நலச் சங்கத் தலைவர் வி.ஆர். தனசீலன் சால்வை அணிவித்தார். ஆண்டு விழாவையொட்டி அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் கேக் வெட்டி அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. சங்கத்தைச் சேர்ந்த ஏ.எம். இஸ்மாயில் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.