கஜா புயலின் காரணமாக புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இரவில் இருந்து மதியம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூருக்கும்-நாகை மாவட்டத்துக்கும் இடையே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி வியாழக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது.
புதுச்சேரியில் அதன் தாக்கம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, புதுச்சேரியில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு முதல்வரும், அமைச்சர்களும் பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்திருந்தனர்.
இதற்கிடையே, கஜா புயலின் காரணமாக வியாழக்கிழமை பகலில் பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இரவு சூறாவளிக் காற்றுடன் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால், புதுச்சேரி நகரில் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு செய்யப்பட்டது. நிலைமை சீராவதற்கு ஒரு மணி நேரம் ஆனது.
ஆனால், பல இடங்களில் மதியம் வரை மின் விநியோகம் இல்லாமல் இருந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலத்த மழை, சூறாவளிக் காற்றினால் புதுச்சேரியில் ரோமண் ரோலண்ட் வீதி, கந்தப்ப முதலியார் வீதி உள்ளிட்ட 7 இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
பாகூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மரம் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள், போலீஸார் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல, கோரிமேட்டில் உயர் மின்விளக்கு சரிந்து சாலையில் விழுந்ததையும் அகற்றினர். வழக்கம்போல இக்குழுவில் பல உயர் அதிகாரிகள் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தனர். புதுச்சேரியில் மழையளவு கடந்த 24 மணி நேரத்தில் 6.5 செ.மீ. ஆக பதிவாகியிருந்தது.