கஜா புயல் சேதத்தை கணக்கிட ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கஜா புயல் கரையை கடந்து விட்ட நிலையில் அதன் தாக்கம் தற்போது தெரிய வந்துள்ளது.
புயல் கடந்து சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தை ஒட்டியுள்ள காரைக்கால் மாவட்டம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சுனாமி தாக்குதலால் அதிக சேதங்களை சந்தித்த கடலோர கிராமங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது வேதனையை அளிக்கிறது.
பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். சூரைக் காற்றினால் பலர் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகமாக ஏழை, எளிய தினமும் வருமானத்தை நம்பியுள்ளவர்கள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வார காலத்துக்கு பணிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, காரைக்கால் மக்களுக்கு உடனடி நிவாரணம் தற்போது தேவைப்படுகிறது. மத்திய அரசு நிதி அளித்தால் மட்டுமே உரிய நிவாரணம் வழங்க இயலும்.
சேத மதிப்பீட்டை கணக்கிட்டால் மட்டுமே உரிய நிதி கோர முடியும்.
எனவே, மாநில அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து, காரைக்கால் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை பாகுபாடின்றி மதிப்பீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஓம்சக்தி சேகர்.