புதுச்சேரியில் ராவண காவிய தொடர் சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புலவர் குழந்தை இயற்றிய ராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவு புதுச்சேரியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் பன்னிரண்டாவது சொற்பொழிவில் ராவண காவியத்தின் பழிபுரி காண்டத்தின் மூன்று படலங்கள் பற்றித் தனித் தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.
சிறைசெய் படலம், மனைதேடு படலம், நட்புக்கோட் படலம் ஆகிய படலங்கள் கூறும் நிகழ்ச்சிகளை கம்பராமாயணத்துடன் ஒப்பிட்டு முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.
புதுவை தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.ந.நடராசன் தலைமை வகித்தார்.
புதுவை திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி நிகழ்ச்சியை தொடக்கிவைத்து உரையாற்றினார்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரின் படத்தைத் திறந்துவைத்து புதுவை திமுக தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்எல்ஏ உரையாற்றினார். ஆசிரியர் அணித் தலைவர் இயேசு ராசா வரவேற்றார். செயலாளர் நெ.நடராசன் தொகுப்புரை ஆற்றினார். பன்னிரண்டாவது சொற்பொழிவை நிகழ்த்திய முனைவர் க.தமிழமல்லனை அனைவரும் பாராட்டினர். இறுதியில் பகுத்தறிவாளர் கழகச் செய்தியாளர் சிவராசன் நன்றி கூறினார்.