மாநில அளவிலான வாலிபால் போட்டியில் திருவண்ணாமலை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில், "ஈஷா கிராமோத்சவம்'என்னும் மாபெரும் விளையாட்டுப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வாலிபால், எறிபந்து, கபடி ஆகிய 3 போட்டிகள் பிரதான போட்டிகளாக இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, பாரா ஒலிம்பிக் போட்டிகள், கிராமிய விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
2018-ஆம் ஆண்டுக்கான 14-ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த அக்.20-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் 2-ஆவது கட்ட வாலிபால் போட்டிகள் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நவ.17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் மொத்தம் 20 கிராம அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தண்டர்பேட்டை அணி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கடம்பாக்கம் அணியை 2-0 (15-8, 15-10) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
புதுச்சேரியைச் சேர்ந்த தருமாபுரி அணி 3-வது இடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேடவாக்கம் அணி 4-ஆவது இடத்தையும் பெற்றது. முதல் 4 இடங்களை பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுவை அரசுக் கொறடா ஆர். அனந்தராமன் பரிசு வழங்கி பாராட்டினார்.