காரைக்கால் புயல் சேதத்துக்கு மத்திய அரசிடம் நிவாரண நிதியாக ரூ.187 கோடி கேட்கப்பட்டுள்ளது என்று முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
கஜா புயல் நாகப்பட்டினம் பகுதியில் காரைக்கால் அருகில் சில தினங்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. காற்று 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் வீசியதால் மீனவர்களின் படகுகள் பாதிக்கப்பட்டன. புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியவில்லை. அதேபோல, காற்றின் வேகத்தினால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. குடிசை வீடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் மழை வெள்ளத்தால் விவசாய கூலித் தொழிலாளர்களும் வேலைக்குச் செல்ல முடியவில்லை.
நானும் (முதல்வர்), அமைச்சர்களும் புயல் அடித்த 6 மணி நேரத்துக்குள் காரைக்காலுக்குச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டோம். காரைக்கால் ஆட்சியரிடம் சேதத்தைக் கணக்கிட்டு அறிக்கை தர உத்தரவிட்டோம். அவரும் அறிக்கையை தயார் செய்து கொடுத்துள்ளார்.
இதனிடையே, மத்திய அரசுக்கு இடைக்கால அறிக்கை தயார் செய்து அனுப்ப உள்ளோம். வரும் 22-ஆம் தேதி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். இதற்கிடையே, மீனவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்த ரூ.2500-ம், தற்போது புயல் காரணமாக கடலுக்குச் செல்ல முடியாததையும் கணக்கில் கொண்டு, ரூ. ரூ.2,500 என மொத்தம் ரூ.5000 கொடுக்க மாநில பேரிடர் குழுவானது அமர்ந்து பேசியுள்ளோம்.
மேலும், காரைக்காலில் மொத்தம் 9,500 குடிசை வீடுகள் உள்ளன. அதில், விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. அவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.2000 கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1,100 குடிசைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு குடிசைக்கு ரூ.4,100 முறையே நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இடைக்காலமாக ரூ.64 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிப்பைக் கணக்கிட்டு அவர்களுக்கு பணம் வழங்கப்படும். மீதமுள்ள தொகை மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் இடைக்கால நிவாரணத் தொகையில் இருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். குறிப்பாக மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் எங்களின் பேரிடர் குறைதீர்க்கும் அமைப்பின் மூலமாக ரூ.10 கோடி இங்கிருந்து அனுப்பப்படும். அதில் இருந்து நிவாரணத்துக்கான தொகை முழுவதும் கொடுப்பதற்கான நடவடிக்கையை அவர் எடுப்பார். காரைக்காலுக்கு புயல் பாதிப்புக்கு முழு நிவாரண நிதியாக ரூ.187 கோடி கேட்டுள்ளோம்.
அதுமட்டுமன்றி, பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள் சேதமடைந்தது, மரங்கள் சாய்ந்தது சம்பந்தமாகவும் மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டுள்ளோம் என்றார் நாராயணசாமி.