புதுவை குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் இட நெருக்கடியில் உள்ளது. போதிய இடம் வசதி உள்ள இடத்துக்கு இத்துறையை மாற்றுவது அவசியம். எளிதில் மக்கள் வந்து செல்லும் வகையில் அப்புதிய இடம் இருக்க வேண்டும். அதுபோன்ற இடத்தை அடையாளம் காணுமாறு தலைமைச்செயலருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
புதுவையில் 164 பொதுச் சேவை மையங்கள் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே உள்ளன. இம்மையங்களை குடும்ப அட்டை தொடர்பான விசாரணைகளுக்கு பயன்படுத்தவும், இணைய வழியில் பயன்படுத்த குடும்ப அட்டை தகவல்களை மேம்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளேன். குடிமைப்பொருள் வழங்கல் துறையானது அனைத்து புகார்களையும் ஆன்லைன் வழியாக தீர்வு காணும் முயற்சியில் இறங்க அறிவுறுத்தியுள்ளேன். இணையவழி தகவல் மேம்பாட்டின் மூலம் நலத்திட்டங்கள் பெறுவோர் விவரங்களை ஒரே குடையின்கீழ் கொண்டு வர இயலும். இதன்மூலம் ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களில் பயன்பெறுவதை தடுக்க இயலும் என்றார் கிரண் பேடி.
ஆய்வின்போது குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் வல்லவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.