மிலாது நபி திருநாளையொட்டி, முதல்வர் வே. நாராயணசாமி, பேரவைத் தலைவர் வெ. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை இவ்வுலகுக்கு வழங்கிய நபிகள் நாயகம் பிறந்த தினம் மிலாது நபியாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளால் கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் வழங்கிய இஸ்லாம் மார்க்கம் சகோதரத்துவத்தையும், ஈகையின் மகத்துவத்தையும், அன்பின் பெருமையையும் உள்ளடக்கிய ஓர் அற்புதமான வாழ்க்கை நெறிமுறையாகும்.
அவரின் கோட்பாடுகளையும், கொள்கைகளையும், போதனைகளையும் பின்பற்றி நடப்பதே இந்த இனிய நாளில் நாம் செய்ய வேண்டிய கடமையாகும். அவரின் வழிகாட்டுதல்களைப் படிப்பது மட்டுமின்றி, அவ்வழியில் நாமும் வாழ்ந்து வருவதே நம் நல்வாழ்வுக்கான திறவுகோலாக இருக்கும். இந்த இனிய நாளில் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் மிலாது நபி திருநாள் வாழ்த்துகள்.
பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம்: புதுவை மக்கள் அனைவருக்கும் இனிய மிலாது நபி வாழ்த்துகள். குறிப்பாக, இஸ்லாமிய மக்களுக்கு மிலாது நபி வாழ்த்துகள்.
நபிகள் நாயகம் இஸ்லாம் மார்க்கம் மூலம் ஈகை, சகோதரத்துவம், அன்பு, அமைதி, பொறுமை உள்ளிட்ட பெருமைகளையும், மாண்புகளையும் எடுத்துக் கூறி அதன்படி வாழ்க்கையை வாழவும் மக்களுக்கு அறிவுறுத்தினார். அவரது கொள்கைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்
முன்னாள் முதல்வர் என். ரங்கசாமி: அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகுக்கு போதித்தவர் இறைதூதர் நபிகள் நாயகம். அவரது பிறந்த நன்னாளில், அன்பு பெருகவும், அமைதி தவழவும், சகோதரத்துவம் தழைக்கவும், அயராது உழைத்திட உறுதி ஏற்போம். அனைவருக்கும் மிலாது நபி திருநாள் வாழ்த்துகள்.
இதேபோல, புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் மிலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.