புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து 6 ஆயிரம் பேர் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி, மாணவிகளுக்கென தலா 10 விடுதிகள் உள்ளன.
கடந்த 15-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அரவிந்தர் மகளிர் விடுதியில் இந்து மதம் சம்பந்தமான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக
2-ஆவது நுழைவு வாயிலில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல்கலைக்கழகம் முழுவதும் காவி மயமாக்க முயற்சிக்கின்றனர். விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பல்கலை. வளாகத்தில் சுதந்திரமில்லை. ஏபிவிபி அமைப்புக்கு மட்டும் அனைத்து உரிமைகளும் அளிக்கப்படுகிறது.
மற்ற மாணவர் அமைப்புகளுக்கு உரிமைகள் வழங்கப்படுவதில்லை. அனைத்து அமைப்புகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக தலைமை அலுவலகம் முன் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திங்கள்கிழமை தர்னாவிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, துணைவேந்தர் குர்மித் சிங் வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களின் கோரிக்கையை 2 நாள்களில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.