புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஒருங்கிணைந்து குழந்தைகள் நல வளர்ச்சி திட்டம் சார்பில், அரியாங்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் சத்துணவுக் கண்காட்சி நடத்தப்பட்டது.
காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அதிகாரி விஜயா தலைமை வகித்தார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் யஸ்வந்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சத்துணவுக் கண்காட்சியை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். சத்துணவு வகைகளை தயாரித்து இருந்த மகளிருக்கு பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக, அங்கன்வாடி ஊழியர் லதா வரவேற்றார். அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மதுமிதா சத்துணவு குறித்த விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார்.
நிறைவில் நல அதிகாரி அமுர்தவள்ளி நன்றி கூறினார்.
அரியாங்குப்பம் துளசிங்கம் நகர், காமராஜ் நகர், ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் புதுக்குளம் வீதியைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களும், தாய்மார்களும் கலந்து கொண்டனர்.
முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்களான தமிழரசி, அன்னபூரணி, சுசிலா, கற்பகம் மற்றும் மேகலா ஆகியோர் செய்திருந்தனர்.