தேசிய அளவிலான மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற 2 நாள் கருத்தரங்கம் காரைக்கால் என்.ஐ.டி.யில் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
காரைக்காலில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி) வேதியியல் துறை சார்பில் சமீபத்திய மேம்படுத்தல்களால் விளையும் நன்மைகள் குறித்து விவாதிக்கும் நானோ தொழில்நுட்பம் குறித்த 2 நாள் கருத்தரங்கம், புதன்கிழமை தொடங்கியது.
இதில் தேசிய அளவில் 90 மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கத்தை நிறுவனத்தின் இயக்குநர் கே.சங்கர நாராயணசாமி தொடக்கிவைத்தார். சிறப்பு அழைப்பாளரான காரைக்குடி மத்திய மின் வேதியியல் மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் விஜய மோகனன் பிள்ளை பங்கேற்று, எலக்ட்ரோ கெமிக்கல் எனர்ஜி ஸ்டோரேஜ் குறித்துப் பேசினார்.
திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர்
எஸ்.சுரேஷ், நானோ புளூயிட்ஸ் குறித்துப் பேசினார். இதில் 30 பேர் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றினர். சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து பரிசு மற்றும் சான்றிதழை நிறைவு நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர் கே.சங்கரநாராயணசாமி வழங்கிப் பாராட்டினார்.