உலக மருந்தாளுநர் தின சுவரொட்டியை, புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வியாழக்கிழமை வெளியிட்டார்.
உலக மருந்தாளுநர் தினம் ஆண்டுதோறும் செப்.25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுவை மாநில மருந்தாளுநர் கூட்டமைப்பு பல்வேறு அறிவுசார் நிகழ்ச்சிகளை அன்னை தெரசா கல்லூரியில் நடத்தி வருகிறது.
மருந்தியல் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு செப்.25-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையே, வரும் செப்.24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கடற்கரை காந்தி சிலை அருகில் உலக மருந்தாளுநர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மணற்சிற்பம் ஏற்படுத்தி முதல்வர் தலைமையில் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, புதுவை சட்டப்பேரவையில் மருந்தாளுநர் தின சுவரொட்டியை சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் முன்னிலையில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெளியிட்டார். அதனை புதுவை அரசு மருந்தாளுநர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் பெற்றுக்கொண்டார். அப்போது சங்க நிர்வாகிகள் ஜான்மெல்ட், விஜயகுமார், முருகையன், ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.