அரசியல்வாதியாக இருந்து கொண்டு செய்திகளை தெரிந்து கொள்ளாவிடில் அரசியலில் இருந்து தூக்கி எறியப்படுவோம் என புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா புதன்கிழமை (செப்.26) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. இதன் அறிமுக விழா பிரெஞ்சு தூதர அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவில் முதல்வர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதுச்சேரியில் முதல் முறையாக நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை அறிமுகப்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், திரைப்படங்களை பார்ப்பதற்கு தனக்கு நேரமில்லை. இருப்பினும் செய்தி சேனல்களை பார்க்கத் தவறுவதில்லை. அரசியல்வாதியாக இருந்து கொண்டு செய்திகளை தெரிந்து கொள்ளாவிடில் அரசியலில் இருந்து தூக்கி எறியப்படுவோம் எனக் குறிப்பிட்டார்.
இந்தத் திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை காலை தொடங்குகிறது. 5 நாள்கள் நடைபெறும் இத்திரைப்பட விழாவில் தேசிய விருது பெற்ற பல்வேறு நாடுகளின் 124 படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.