தலைக்கவச சட்ட விவகாரம்: புதுவை முதல்வர் மீது மத்திய அரசிடம் ஆளுநர் புகார்
கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்தும் விவகாரம் தொடர்பாக முதல்வரின் குறுக்கீடுகள் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் கிரண் பேடி புகார் அனுப்பியுள்ளார்.
இது குறித்து மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை அனுப்பிய கடிதம் விவரம்:
புதுவையில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்தாததால் சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தலைக்கவசத்தை அணிய சம்பந்தப்பட்ட துறைகள் வலியுறுத்தும்போது, அதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் நாராயணசாமி கூறும் கருத்துகளால் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
இதனால், இச்சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்துவதா அல்லது முதல்வரின் உத்தரவுப்படி தளர்த்தி அமல்படுத்துவதா என்ற குழப்பம் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்படுகிறது.
போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு, இச்சட்டத்தை 2 மாதங்களுக்குப் பின்னர் அமல்படுத்தலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
எனவே, மத்திய தரைவழிப் போக்குவரத்துறை அமைச்சகம், இச்சட்டத்தை அமல்படுத்த முதல்வருக்கு சரியான அறிவுரையை வழங்க வேண்டும்.
சாலைப் பாதுகாப்பு பிரச்னையில் முதல்வர் தலையிடக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.