ஆளுநர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் உள்ளிட்டோரை அப்புறப்படுத்த வலியுறுத்தி, பாஜகவினர் புதுச்சேரியில் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
முன்னதாக, மாநிலத் தலைவர் வி. சாமிநாதன் தலைமையிலான பாஜகவினர், டிஜிபி சுந்தரி நந்தாவை சந்திக்கச் சென்றனர். அங்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் உள்ளே அனுமதித்தனர்.
இதையடுத்து உள்ளே சென்ற பாஜகவினர், டிஜிபியிடம், அமைதியான மாநிலமான புதுவையின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வரை அப்புறப்படுத்தி கைது செய்ய வேண்டும் என முறையிட்டனர்.
இதற்கு டிஜிபி, அமைதியான முறையிலேயே போராட்டம் நடைபெறுவதால் அப்புறப்படுத்த இயலாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாஜகவினர், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது, புதுவை முதல்வரைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதையறிந்து அங்கு வந்த எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீஸாரின் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பாஜகவினர் மணிமண்டபத்தின் எதிர்புறம் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாஜக தலைவர் வி. சாமிநாதன் கூறுகையில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு முதல்வர் தன்னுடைய தவறை மறைப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காகவும், பொதுமக்களின் அமைதியை கெடுப்பதற்காகவும், தேர்தலை மனதில் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்னை என்றால் சட்டப்பேரவைக்குள் போராட்டம் நடத்தலாமே என்றார்.
இதில் துணைத் தலைவர் ஆர். செல்வம், பொதுச் செயலர் தங்க. விக்ரமன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.