காரைக்கால் பிரைட் அகாதெமி பள்ளியில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் வேட்டைக்காரன் தெருவில் உள்ள பிரைட் அகாதெமி பள்ளியில், கல்வியாண்டு நிறைவையொட்டி மாணவர்களிடையே திறன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி (டேலன்ட் ஷோ) நடத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் ஓவியம், பாடல், நடனம், யோகா, தற்காப்புக் கலை, இசை உள்ளிட்ட போட்டிகளில் தனியாகவும், குழுவாகவும் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்வி அல்லாது தாங்கள் விரும்பும் பிற கலையைக் கற்றறிந்து, திறனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதற்கான பருவம்தான் பள்ளிப் பருவம். எனவே இதை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதோடு, பெற்றோர்களும் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின்போது நடுவர் குழுவினர், மாணவர்களின் திறன்களை சோதித்து தேர்வு செய்தனர். பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர். பள்ளி நிர்வாக இயக்குநர் எஸ். செந்தில்குமார், தாளாளர் காஞ்சனாதேவி, பள்ளி முதல்வர் மோகனவித்யாவதி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.