சுகாதாரத் துறை ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை சுகாதாரத் துறை ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை சுகாதாரத் துறை ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
நோயாளி கவனிப்புப்படியை இரு மடங்காக உயர்த்த வேண்டும், வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும், 7 ஆவது ஊதியக் குழு அறிவித்த 8 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பணிக்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை சுகாதாரத் துறை ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில், செஞ்சி சாலையில் உள்ள புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை, கோரிமேட்டில் உள்ள இஎஸ்ஐ மற்றும் மார்பு நோய் மருத்துவமனையில் பணியாற்றிய சுகாதாரத் துறை ஊழியர்கள் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலான ஒரு மணி நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, மருத்துவமனை வளாகத்தில் திரண்ட அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், செயலாளர் அன்புச்செல்வன், தலைவர் ஜானகி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மற்ற இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். இதே போல, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சுகாதாரத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
சுகாதாரத் துறை ஊழியர்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள்
சிரமத்துக்குள்ளாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com