புதுவையில் அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் பாஜக தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இதற்காக அனைத்துத் தரப்பு மக்களிடமும் அக்கட்சி நிர்வாகிகள் கருத்து கேட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்துத் தொகுதிகளிலும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
புதுவை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 30 பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களில் வாகனம் மூலம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்பு வாகனம் புதுச்சேரியில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கருத்துக் கேட்பு வாகன பயணத்தைத் தொடக்கிவைத்தார். மேலும், தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் பெட்டியையும் அவர் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சிக்குப்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறிந்து பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கவுள்ளது. இதற்காக தொகுதிகள் தோறும் வாகனங்கள் செல்லும், இதில் மக்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். புதுவையில் மிக பலமான கூட்டணியை பாஜக அமைத்துள்ளது. பிரதமர் மோடியின் கை ஓங்கவே இந்தக் கூட்டணி. யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல; யார் பிரதமர் என்பதே எங்களுக்கு முக்கியம். மீண்டும் வேண்டும் மோடி என்பதற்காக "கமல் ஜோதி' என்னும் பெயரில் தினமும் பாஜகவினர் மற்றும் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் வீட்டில் மாலை 6 மணிக்கு தாமரை கோலமிட்டு விளக்கேற்றவுள்ளோம் என்றார் வி.சாமிநாதன். பேட்டியின்போது கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் செல்வம், மாநிலப் பொதுச்செயலர் தங்க.விக்ரமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.