புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில், கடற்கரை திருவிழாவையொட்டி மணல் சிற்பப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய சுற்றுலாத் துறை நிதியுதவியுடன் புதுவை சுற்றுலாத்துறை சார்பில் திப்புராயப்பேட்டையில் உள்ள பாண்டி மெரினா கடற்கரை, சின்னவீராம்பட்டினம், ஈடன் கடற்கரை, வீராம்பட்டினம், அரிக்கன்மேடு, டெம்பிள் கடற்கரை உள்ளிட்டவை பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கடற்கரைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் புதுவை சுற்றுலாத் துறை சார்பில் கடற்கரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்திருவிழா பிப்.21-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி சுற்றுயாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கடற்கரை வாலிபால், கடற்கரை கபடி, மணல் சிற்பம் உருவாக்குதல், காற்றாடி பறக்கவிடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பிப்.21-ஆம் தேதி முதல் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், அரசு, தனியார் கல்லுôரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
கடற்கரை திருவிழாவின் ஒரு பகுதியாக, விராம்பட்டினம் டெம்பிள் கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறை மாணவ, மாணவிகள்கலந்து கொண்டு மணல் சிற்பத்தை உருவாக்கினர். அவர்கள் தலா 6 பேர் என 23 குழுக்களாக பிரிந்து மணல் சிற்பங்களை செய்தனர். தலைக்கவசம் அணிவதன் அவசியம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி, சின்னதம்பி யானை, வன விலங்குகள் உள்பட பல்வேறு சிற்பங்களை வரைந்தனர். இந்தப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா திப்பராயப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசாக ரூ.7,500, இரண்டாவது பரிசாக ரூ.5,000, மூன்றாவது பரிசாக ரூ.4,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.