புதுச்சேரியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு தொடர்பாக வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக வருமான வரித் துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து வருமானவரித் துறை உதவி ஆணையர் குமார் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை அந்த மையத்துக்கு திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அங்குள்ள வரவேற்பறை, மருத்துவர்கள் அறைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேர சோதனைக்குப் பிறகு வருமான வரித் துறையினர் புறப்பட்டுச் சென்றனர். என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை.