புதுச்சேரி அரிக்கன்மேட்டில் மீண்டும் அகழாய்வுப் பணியை நடத்த வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தினார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான அரிக்கன்மேடு தற்போது புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த 1937-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் ழெ லென்டில், ழுவே துப்ரியோ ஆகியோர் அந்த இடத்தைக் கண்டறிந்தனர். அதன் பின்னர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சர் மார்டிமர் வீலர் என்ற உலகப் புகழ்பெற்ற தொல்லியலாளர் அங்கு அகழ்வாய்வு செய்து அரிய பொருள்கள் பலவற்றைக் கண்டெடுத்தார்.
வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்கள், ரோம் நாட்டின் முத்திரை பதித்த ஈமத் தாழிகள், சாடிகள் உள்ளிட்ட பல பொருள்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழ்வாய்வு இந்தியாவுக்கும் ரோம் நாட்டுக்கும் இடையே நடைபெற்று வந்த வணிக உறவை தெள்ளத் தெளிவாக நிரூபித்தன. இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் இருக்கலாம் என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். தற்போது இந்த இடம் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் அங்கே எந்த ஒரு அகழ்வாய்வும் நடத்தப்படவில்லை. தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் அந்தப் பகுதி சரியாகப் பராமரிக்கப்படவில்லை. அங்கே புதிய அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார் ரவிக்குமார்.