கடல் சாகசம் மேற்கொண்டு புதுச்சேரி திரும்பிய குழுவினரை முதல்வர் வே.நாராயணசாமி பாராட்டினார்.
தமிழ்நாடு, புதுவை மற்றும் அந்தமான் என்சிசி இயக்ககத்தின் வழிகாட்டுதலின்ப, புதுவை என்சிசி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் கடல் சாகசப் பயணம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, "சமுத்திரக்கனி - 2019' என்ற பெயரில் என்சிசி மாணவர்களின் கடல் சாகசப் பயணம் கடந்த 9-ஆம் தேதி புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. 3 பாய்மரப் படகுகளில் என்சிசி கமாண்டர் தினகரன் தலைமையில், 35 மாணவர்கள், 25 மாணவிகள் காரைக்கால் புறப்பட்டனர். கல்வித் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் இந்த சாகசப் பயணத்தைத் தொடக்கிவைத்தார். பாய்மரப் படகில் துடுப்பு போட்டபடி கடலூர், பரங்கிப்பேட்டை பழையாறு, தரங்கம்பாடி வழியாக சாகசக் குழுவினர் காரைக்கால் சென்றனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கடல் மார்க்கமாக வெள்ளிக்கிழமை புதுச்சேரி திரும்பினர். மொத்தம் 400 கி.மீ. தொலைவை 11 நாள்களில் சென்று திரும்பினர். வெள்ளிக்கிழமை அவர்களை முதல்வர் வே.நாராயணசாமி வரவேற்றார். சாகசப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பிய என்சிசி மாணவர்களைப் பாராட்டி, சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கினார்.
நிகழ்வில் என்சிசி குரூப் கமாண்டர் ஜெயச்சந்திரன், கடலோரக் காவல் படை டிஐஜி சங்சீவ் மற்றும் என்சிசி அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.