உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சோனாபத்ராவில் சொத்துத் தகராறால் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்று முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட பதிவு: உத்தரப் பிரதேச மாநிலம், சோனாபத்ராவில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தியை, தடுத்து கைது செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். இது கண்டனத்துக்குரியது. எனவே, அவரை உடனடியாக விடுவித்து, பாதிக்கப்பட்ட நபர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வரை வலியுறுத்துவதாக அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் நாராயணசாமி.