புதுவை மாநிலம், பாகூரில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாகூர் மார்க்கெட் வீதியில் நான்குமுனைச் சந்திப்பில் பூலோக மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் பூசாரி அப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜைகள் முடித்து கோயிலை பூட்டிவிட்டுச் சென்றார்.
திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்த போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு கோயிலின் பின்புறத்தில் வீசப்பட்டிருந்தது.
மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு, சில்லறை காசுகளை உண்டியலுடன் வீசி விட்டுச் சென்றது தெரிய வந்தது. உண்டியலில் சுமார் ரூ. 25,000 வரை பணம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.