புதுவை மத்தியப் பல்கலைக்கழக வளாகம், காரைக்கால் வளாகத்தில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒரு மாதமாக காரைக்காலில் நடைபெற்றது. இதில், காரைக்கால் வளாகத்தில் பயின்று வரும் 500 மாணவ, மாணவிகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். கிரிக்கெட், வாலிபால், இறகுப் பந்து, செஸ், மேஜைப்பந்து, கேரம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும், தடகள பிரிவில் ஓடுதல், தாண்டுதல், குதித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. புதுவை பல்கலை, காரைக்கால் மையத் தலைவர் அமிலன் தலைமை வகித்தார். முன்னதாக முனைவர் அருள்முருகன் வரவேற்றார். பேராசிரியர்கள் செந்திகுமார், குமரவேல், அருள்முருகன் ஆகியோர்கள் விழா மற்றும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக பல்கலை. உதவி விளையாட்டு இயக்குநர் கலந்து கொண்டு சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி, வெற்றி பெற்றவர்களை பாராட்டினார். போட்டிகளில் காரைக்கால் மேலாண்மைத் துறை மாணவ, மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். போட்டி ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்திகுமார் நன்றி கூறினார்.