தமிழ்நாடு அரசு சட்டப் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டியில், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர் ரானேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சட்டக் கல்லூரிகளுக்கு இடையேயான 20-ஆவது தடகளப் போட்டிகள், இறகுப் பந்து, கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட குழுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், விழுப்புரம் அரசு சட்டக் கல்லுôரி மாணவர் குழுவினர் கலந்துகொண்டனர். இதில், கைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட், தடகளப் போட்டிகளில் 54 பேர் கலந்துகொண்டனர்.
இதில், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர் ரானேஷ் குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம், தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார்.
இதையடுத்து, மாணவர் ரானேஷுக்கு, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகேசன் (படம்) மற்றும் பேராசிரியர்கள் மாணவருக்குப் பாராட்டு தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை மாணவர் ரானேஷ் வென்றதாக கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.