கள்ளக்குறிச்சி அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கணவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மாமனார், மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கடத்தூர் காட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (30).
இவருக்கும், கள்ளக்குறிச்சியை அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துசாமிக்கும் (38) கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
திருமணத்தின்போது, சங்கீதாவுக்கு 25 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாம். இந்த நிலையில், கூடுதலாக ரூ.5 லட்சம் வாங்கி வரக் கோரி, சங்கீதாவை அவரது கணவர் முத்துசாமி மற்றும் மாமனார், மாமியார், உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி வழக்குப் பதிவு செய்து முத்துசாமியை செவ்வாய்க்கிழமை கைது செய்தார்.