விழுப்புரம் அருகே சாலையோரம் கிடந்த பேரலில் இருந்து ரசாயனம் கசிந்து துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே செஞ்சி நெடுஞ்சாலையில் உள்ள பூத்தமேடு கிராமத்தில் தமிழக மின்வாரியத்தின் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த மின் நிலையத்தின் வெளியே செஞ்சி நெடுஞ்சாலையோரம் வெள்ளிக்கிழமை காலை பிளாஸ்டிக் பேரல் ஒன்று திறந்த வெளியில் கிடந்தது.
சாய்ந்து கிடந்த பேரலின் வாய் திறந்த நிலையில், ரசாயனம் கசிந்து கீழே கொட்டியுள்ளது. இந்த ரசாயனக் கலவை காற்றில் கலந்து, அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது.
செஞ்சி சாலை வழியாக வந்த பொது மக்களுக்கு இந்த துர்நாற்றம் அச்சத்தை ஏற்படுத்தியதால், பேரலுக்குள் அழுகிய உடல் இருப்பதாக சந்தேகம் தெரிவித்து புகார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் விரைந்து சென்று அந்த பேரல் இருந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அதிலிருந்த ரசாயனம் கசிந்து துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. மின்வாரிய அலுவலகத்திலிருந்து தூக்கி வீசியிருக்கலாம் என்று புகார் கூறப்பட்டது. அதனை மின்வாரியத்தினர் மறுத்தனர். இதனால், அந்த பேரலை போலீஸார் அங்கிருந்து அகற்றினர்.