விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ் (படம்) கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை தனது கட்சியினருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு பருவப் பயிர்களுக்கு தென்பெண்ணை ஆற்று நீர்ப் பாசனம் பெறுவதற்கு சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரத்தில் பெரிய காலனி ஜி.ஆர்.பி. தெரு, வழுதரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும்.
குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். நகராட்சியில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணிகளின்போது பெரியகாலனி பகுதியில் தண்ணீர் தேங்கி ஆக்கிரமித்துள்ள குட்டைகளை அகற்றி சீர்படுத்த வேண்டும்.
நகரில் கழிவு நீர் வெளியேற நீர்வரத்து வாய்க்கால்களை சுத்தப்படுத்த வேண்டும். தாட்கோ திட்டத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலருக்கே கடன்கள் வழங்கப்படுகின்றன. உரிய தகுதியுடைய அனைவருக்கும் அந்தத் திட்டத்தில் தடையின்றி கடனுதவி வழங்கப்பட வேண்டும். வானூர் பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகள் தரமின்றி போடப்படுகிறது. இந்தப் பிரச்னைகள் தொடர்பாக, ஏற்கெனவை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தினார்.
திமுகவைச் சேர்ந்த நன்னாடு முத்து, ராம்ஜி, ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.