லஞ்ச வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த பாபு, வாகன தகுதிச் சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவருடன், அவரது உதவியாளர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.
கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இருவரில் செந்தில்குமாருக்கு கடந்த மாதம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாபுவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாபுவுக்கு நவ. 22 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, பாபு கைது செய்யப்பட்டு சிறையில் 60 நாள்கள் கடந்த நிலையில், விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் ஜாமீன் கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு செவ்வாய்க்கிழமை நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு காவல் நிலையத்தில் அடுத்த 30 நாள்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு பாபு நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.