உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் சமூக சமத்துவப் படை கட்சி சார்பில் மக்கள் மனுநீதி நாள் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சமூக சமத்துவப்படை நிறுவனர் சிவகாமி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். பின்னர், அவர் பேசியதாவது:
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஏழை, எளிய உழைக்கும் மக்களாகிய தாழ்த்தப்பட்ட, இருளர் சமுதாய மக்கள் வீட்டுமனைப் பட்டா, மயானப் பாதை, முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை கோரி விண்ணப்பம் அளித்தும் கிடைக்காத அவல நிலையில் உள்ளனர். ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் முறையாக வேலைவாய்ப்பு வழங்குவதில்லை. மாறாக, பெரும் விவசாயிகளிடம் இயந்திரம் மூலம் நிலத்தைச் சீரமைக்கக் கூறி, ஏழை மக்களுக்கு வேலை கொடுத்தது போல நிதியைச் சுரண்டுகின்றனர். தேர்தல் காலத்தில் கவர்ச்சிகரத் திட்டங்களை அறிவித்து, பணத்தை கொடுத்து வாக்கு கேட்டு வரும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.