பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் கற்க கசடற கலை இலக்கியக் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, கழகத் தலைவர் தேவ.திருவருள் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் ச.கா.இளையராஜா முன்னிலை வகித்தார். கழக நிர்வாகி கார்த்தி வரவேற்றார். சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க.செம்பியன், ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் அ.முகமத்ரபி, சங்கைத் தமிழ்ச் சங்கச் செயலர் ச.சாதிக்பாஷா, முத்தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலர் பாரதிகிருஷ்ணன், விருகாவூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகம் பிச்சைப்பிள்ளை, சமூகப் பல்நோக்கு முன்னேற்ற தொண்டு நிறுவனப் பொருளாளர் நா.தனவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பெண்களை அனுமதிக்க வேண்டும். தொடரும் பாலியல் பலாத்காரத்தில் இருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும். பெண்ணிய ஒடுக்குமுறையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தென்பெண்ணைத் தமிழ்ச் சங்க துணைச் செயலர் ஜம்படை தே.அய்யாக்கண்ணு, கார்குழலி கல்வி அறக்கட்டளைத் தலைவர் இராசு.தாமோதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஸ்டார் கிளப் தலைவர் கு.பிலால் நன்றி கூறினார்.