முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு, ஊழியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் ராதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆலையின் துணைத் தலைவர் எஸ்.எம்.ரமேஷ் தலைமை வகித்தார். ராதாபுரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிவசங்கரி ஆகியோர், டெங்கு பரப்பும் கொசுக்கள், கொசுப்புழுக்களை அழிப்பது, சுற்றுப் புறங்களை தூய்மையாகப் பராமரிப்பது குறித்து விளக்கமளித்தனர்.
டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி, காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் உடனடியாகச் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டும் என சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், வித்யாலட்சுமி ஆகியோர் அறிவுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஆலையின் அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு, டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.