கண்டமங்கலம் வட்டாரத்தில் நடப்பு நெல் பயிர்களில் இலை வண்ண அட்டை கொண்டு ஆய்வு செய்து தழைச்சத்து உரமிட்டு பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள சித்தலம்பட்டு, வளவனூர் குறு வட்டங்களில் உள்ள கிராமங்களில், நடப்பு சம்பா பருவத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பா நெல் பயிர்களுக்கு, இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து உரமான யூரியாவை இடுவதால், பயிருக்குத் தேவையான தழைச்சத்து மட்டுமே வழங்குவதோடு, தேவையற்ற உரச் செலவை குறைக்கவும் வழி செய்கிறது.
இதற்காக, நெல் நடவு நட்ட 14-ஆவது நாளிலிருந்தும் அல்லது நேரடி விதைப்பில் விதைத்த 21-ஆவது நாள் முதல் வாரம் ஒரு முறை கதிர் வெளிவரும் தருணம் வரை கணக்கீடு செய்ய வேண்டும். பயிரின் மேலிருந்து முழுவதும் விரிந்த 3-ஆவது இலையில் இந்த கணக்கீடு செய்ய வேண்டும்.
காலையில் 8 மணியிலிருந்து 10 மணிக்குள் இலை வண்ண அட்டையின் நிறத்தையும், இலையின் நிறத்தையும் ஒப்பீடு செய்ய வேண்டும். வயலில் 10 இடங்களில் இது போல் கணக்கீடு செய்ய வேண்டும். நேரடி விதைப்பு பயிருக்கு இலை வண்ண அட்டையில் உள்ள 3-ஆவது நிறத்தையும், வரிசையில் விதைப்பு செய்த பயிருக்கு 4-ஆவது நிறத்தையும் ஒப்பீடு செய்ய வேண்டும்.
மேலும், குறைவாக தழைச்சத்து தேவைப்படும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி போன்ற பயிர்களுக்கு இலை வண்ண அட்டையில் உள்ள 3-ஆவது நிறத்தையும், மற்ற ரகங்களுக்கு 4-ஆவது நிறத்தையும் ஒப்பீடு செய்து பரிந்துரை செய்யப்பட்ட அளவில் உரமிட வேண்டும்.
கணக்கீட்டில் பச்சை வண்ண அட்டையின் நிறத்தைவிட பயிர் நிறம் 6 இடங்களுக்கு மேல் குறைவாக இருந்தால், வறட்சியான சூழலில் 30 கிலோ யூரியா ஒரு ஏக்கருக்கும், மழை நேரங்களில் 25 கிலோ யூரியா ஒரு ஏக்கருக்கும் இட வேண்டும் இதன்மூலம் அதிக மகசூல் பெறலாம் என்று, வேளாண் உதவி இயக்குநர் இரா.பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.