விழுப்புரம் அருகே தம்பதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதில் மனைவி உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த ஓட்டேரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமலை (60), விவசாயி. இவரது மனைவி பூரணி(57). வறுமையான குடும்பப் பின்னணிக் கொண்ட, திருமலை, மகன் திருமணத்துக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தாராம். அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திருமலை, பூரணி ஆகிய இருவரும் கவலையுடன் காணப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு திருமலையும், பூரணியும் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் இருவரையும் உறவினர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திங்கள்கிழமை காலை பூரணி உயிரிழந்தார். திருமலை சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக, வளவனூர் போலீஸார் வழக்குப் பதிந்து திருமலை, பூரணி தம்பதி கடன் தொல்லையால் விஷம் அருந்தினரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.